திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் இருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு மினி சரக்கு வேன் மயிலாப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை அருண் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பழைய சிறைச்சாலை சாலையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மகளிர் விடுதி அருகே இருக்கும் மேம்பாலத்தில் இருந்து சரக்கு வேன் இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் சரக்கு வேன் மோதி கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில் லேசான காயத்துடன் அருணும், அவருடன் வந்த கண்ணன் என்பவரும் உயிர் தப்பினர். மேலும் 3 டன் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் சாலையில் கொட்டி வழிந்தோடியது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து சரக்கு வேனையும் மீட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.