சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான யுகேஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் திருமணமான இளம்பெண் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் யுகேஷ்குமார் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார்.

இதனையடுத்து இருதரப்பு குடும்பத்தினரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிச்சயம் செய்தனர். வருகிற மே மாதம் 25-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அதற்குள் விவாகரத்து வழக்கு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விவாகரத்து வழக்கு முடியவில்லை. இதனால் விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த பெண் யுகேஷ்குமாரிடம் கூறியதால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த யுகேஷ்குமார் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யுகேஷ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.