தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பள்ளிகள் திறந்த பிறகு ஜூன் 1-ம் தேதி முதல் 5-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், வழங்கப்பட வேண்டிய பொருட்களை முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் தவிர மாணவர்களுக்கு புத்தகப்பை, காலணி, சீருடைகள், வண்ண பென்சில்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவைகளையும் போதிய அளவில் இருப்பு வைத்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.