அரியவகை விந்தணுக்களைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், 19 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் தவித்த தம்பதியினர் கருத்தரித்துள்ளனர். இந்தச் சாதனை லான்செட் ஆய்விதழில் வெளியாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயது ஆணுக்கும், 37 வயதுப் பெண்ணுக்கும் பலமுறை ஐவிஎஃப் மற்றும் விந்தணு பிரித்தெடுக்கும் அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்த நிலையில், இந்த புதிய ஏஐ முறை ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

விந்தணு குறைபாடு உள்ள ஆண்களின் விந்தில் மிகக் குறைந்த அல்லது விந்தணுக்கள் இல்லாமலேயே இருக்கும். இவர்களுக்கு, விந்தணுவைச் சோதனைப் பையிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்கும் முயற்சிகளும் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவதோடு, மேலும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும். இதனால், பல தம்பதிகள், “உயிரியல் ரீதியாக குழந்தை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை” என்று மருத்துவ உலகால் கைவிடப்படும் நிலை இருந்தது.

இத்தகைய சவாலை எதிர்கொள்ள, ‘விந்தணுவைக் கண்காணித்தல் மற்றும் மீட்டெடுப்பு’ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முறையை ஆய்வுக் குழு உருவாக்கியுள்ளது. அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பம் மூலம் விந்தணு மாதிரிகளை ஸ்கேன் செய்து, ஒரு மணி நேரத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான படங்களைப் பிடிக்கிறது இந்தத் தொழில்நுட்பம். பின்னர், ஏஐ அல்காரிதம் மூலம் விந்தணுக்கள் அடையாளம் காணப்பட்டு, ஒரு சிறிய சிப் வழியாக அவை தனியாகப் பிரிக்கப்படுகின்றன.

இந்த ஒரு நிகழ்வில், ஸ்டார் அமைப்பு இரண்டு மணி நேரத்தில் 25 லட்சம் படங்களை ஆய்வு செய்து, இரண்டு அசைவுள்ள விந்தணுக்களைக் கண்டுபிடித்துள்ளது. அந்த விந்தணுக்கள் கருமுட்டைகளில் செலுத்தப்பட்டு கருக்கள் உருவாக்கப்பட்டன. அவை பெண்ணின் கருப்பையில் இடப்பட்டு, 13 நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமான கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது, இந்த தொழில்நுட்பத்தின் முழுமையான செயல்திறனை அறியும் வகையில் விரிவான மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இம்முறை, மலட்டுத்தன்மை சவாலை எதிர்கொள்ளும் பல தம்பதிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிப்பதாகக் கருதப்படுகிறது.