1,000 குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது நீதி நெறியின் அடிப்படை. ஆனால், அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் வேதம் என்பவர் செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். இத்தனை ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்க அதிகாரிகள் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற மீண்டும் சிறைபிடித்தனர். அவரது சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், இந்த நாடுகடத்தல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

43 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகும், அவர் நிரபராதி என நீதி உறுதி செய்த பின்பும், சுப்ரமணியம் வேதம் நிம்மதி அடையவில்லை. நிரபராதியைக் தண்டித்த அநீதி ஒருபுறம் இருக்க, இப்போது அவர் சட்டப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் இருக்கிறார். நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இந்தத் துயரம், நீதி அமைப்பின் மீது பல கேள்விகளை எழுப்புகிறது. சட்டப் போராட்டம் முடிந்து, அவர் தனது தாய் மண்ணுக்குத் திரும்பப் போகிறாரா அல்லது அமெரிக்காவில் தனது நிரந்தர குடியுரிமையைத் தக்கவைத்துக் கொள்ளப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.