சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அவரது மனைவி சாந்தியுடன் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். திடீரென அவர்கள் தங்கள் மறைத்து வைத்திருந்த டீசலை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது முருகேசன் கூறியதாவது, எங்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கொடுக்கும்படி பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நிலத்தை அளவீடு செய்ய அலுவலர் 2 லட்ச ரூபாய் கேட்கிறார். அவ்வளவு பணத்தை எங்களால் கொடுக்க முடியாது. இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்தி போலீசார் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.