கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் ரவி நாகர்கோவிலில் இருக்கும் மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்-மில் ஐந்தாயிரம் ரூபாய் எடுத்தபோது பணம் வரவில்லை. ஆனால் பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்ததால் உடனடியாக தான் சேமிப்பு கணக்கு வைத்திருந்த வங்கிக்கு சென்ற மேலாரிடம் புகார் அளித்துள்ளார். அவர் 2 நாட்களில் பணம் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் கூறியபடி பணம் திரும்ப கிடைக்கவில்லை.

இதனால் வழக்கறிஞர் மூலம் ரவி சம்பந்தப்பட்ட வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் பிறகும் உரிய பதில் கிடைக்காததால் ரவி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 15 ஆயிரம் ரூபாய் அபராதம், வழக்கு செலவு தொகை 5 ஆயிரம், வங்கியில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை 5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.