ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் பதற்றம் இன்னும் குறையாமல் உள்ளது. இரு நாடுகளின் ராணுவத்தினருக்கும் இடையே தொடர் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில், நேற்று மாலை 48 மணி நேரத்துக்கு தற்காலிக சண்டை நிறுத்தம்*அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் தாலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படும் பீரங்கிகள் தற்போது ஆப்கானிஸ்தான் தெருக்களில் சுற்றியபடி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

வீடியோவில், தாலிபான் போராளிகள் பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றியதாக கூறப்படும் பீரங்கிகள் மற்றும் டாங்கிகளை ஆப்கானிஸ்தானின் தெருக்களில் காட்டுமிராண்டித்தனமாக ஓட்டிச் செல்லும் காட்சிகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபுல்லா முஜாஹித், “பாகிஸ்தான் ராணுவ தளங்களில் பலவற்றை நாங்கள் தாக்கி அழித்தோம். அங்கு இருந்த ஆயுதங்கள், பீரங்கிகள் அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டன” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் கூற்றை பாகிஸ்தான் அரசு முழுமையாக மறுத்துள்ளது. “வீடியோவில் காணப்படும் டாங்கிகள் எங்கள் ராணுவத்துக்குச் சொந்தமானவை அல்ல. தாலிபான்கள் வேறு இடங்களில் இருந்து வாங்கிய பழைய வாகனங்களை நமது ஆயுதங்களாக காட்டுகிறார்கள்” என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கடும் எதிர்வினை தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு பிரசார முயற்சி மட்டுமே என்றும் அவர் கூறினார்.

தாலிபான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு கடந்த சில மாதங்களாக மோசமடைந்த நிலையில், இந்த புதிய சம்பவம் இரு நாடுகளுக்கிடையே புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதே நேரத்தில், தாலிபான்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, உலக அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியிருகிறது.