சென்னை அயனாவரம் பாளையக்கார தெருவில் வசிப்பவர் இந்திரமோகன் (72). இவர் ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நிலம் வாங்க விரும்பியதை  அறிந்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் வேல்முருகன், சுகுமாரன், சுரேஷ், பிளீந்திரன் ஆகியோர் அவரிடம் தொடர்பு கொண்டனர். இதனையடுத்து இவர்கள் 4 பேரும் சேர்ந்து அம்பத்தூரை அடுத்த பாடி பாண்டுரங்கபுரம் பகுதியில் வசிக்கும் கோபிநாதன் (53) என்பவரை அவருக்கு அறிமுகபடுத்தி வைத்தனர்.

பின்னர் கோபிநாதன், இந்திரமோகனிடம் வேப்பம்பட்டு கணேஷ் நகரில் உள்ள 1,800 சதுர அடி கொண்ட 2 வீட்டு மனைகளை காண்பித்துள்ளார். இந்த இடம் தனது நெருங்கிய நண்பர்களுக்கு சொந்தமான இடம் என கூறி ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணமும் தயாரித்துள்ளார். இதன் பிறகு இந்திரமோகனிடம் ரூ.54 லட்சத்தை வாங்கி கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து இந்திரமோகன் அந்த இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்தபோது அந்த 2 மனைகளின் உரிமையாளர்கள் வந்து இது தன்னுடைய இடம் என கூறி வீடு கட்டும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால் இந்திரமோகன் அதிர்ச்சியடைந்து கோபிநாத்திடம் இது பற்றி கேட்டதற்கு, வேறு ஒரு வீட்டு மனையை அதன் உரிமையாளரிடம் பேசி இந்திரமோகனுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த வீட்டுமனை உரிமையாளரிடம் கேட்ட போது, அவர் கிரையம் செய்து கொடுக்காமல் கோபிநாதன் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த இந்திரமோகன், இந்த மோசடி பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கோபிநாதன் 2 வீட்டு மனைகளின் உரிமையாளர்களின் பெயர்களை பயன்படுத்தி போலியான நபர்களின் மூலம் பொய்யான ஆவணமும் தயாரித்து ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து கோபிநாதனை கைது செய்த போலீசார் நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.