மதுரையில் ரவுடிகளின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க போலீஸ் கமிஷனரின் உத்தரவு படி, ரவுடிகள் பட்டியலை தயார் செய்தனர். அதில் இங்கு மட்டும் 400 ரவுடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அந்த ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்த போலீசார் முடிவு செய்து, கடந்த 5-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 400 ரவுடிகளின் வீடுகளிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ஜெய்ஹிந்துபுரம், திடீர்நகர், கூடல்புதூர், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 9 ரவுடிகளின் வீட்டில் இருந்து 5 பெரிய வாள், 2 கத்தி, 1 அரிவாள் போன்றவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த பாலாஜி, கார்த்திகேயன், கருப்பையா என்ற போதகர், சரவணன், நூர்கான், கார்த்திக், விக்னேஸ்வரன், பழனிக்குமார், மணிகண்டன் போன்ற 9 ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இது குறித்து போலீஸ் கமிஷனர் கூறியுள்ளதாவது, இங்குள்ள ரவுடிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து போலீசாரால் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதால், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்து சிறையில் தள்ளப்படுவார்கள் என்று கூறினார்.