திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய், இளநிலை பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதே போல் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்கும் பட்சத்தில், மாதம் ஒன்றுக்கு ரூ.600, ரூ.750, ரூ.1000 வீதம் 10 ஆண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற தகுதி இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், இதர பிரிவினர் 40 வயதிற்கு மிகவும் இருப்பது அவசியம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. மேலும் தகுதி இருப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.72000-க்கு அதிகமாக இருக்க கூடாது. விருப்பம் இருப்பவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.