சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா (28) என்பவர் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்து நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக ராம்குமார் மற்றும் ஸ்ரேயாவுக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ராம்குமார் ஸ்ரேயாவை விட்டு விலகிச் சென்றதால், அவரை சந்தித்து ஸ்ரேயா தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டுள்ளார்.

ஆனால் ராம்குமார் பணத்தை கொடுக்காததோடு அவருடைய குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஸ்ரேயாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்ரேயா நேற்று அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை உடனிருந்த திருநங்கைகள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு ஸ்ரேயாவுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரேயா தற்கொலைக்கு முயற்சி செய்தது குறித்து உடன் இருந்த திருநங்கைகள் கூறும் போது, ராம்குமார் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர்.

அவருக்கு அனைத்து விதமான பண உதவிகளையும் ஸ்ரேயாதான் செய்தார். தற்போது ராம்குமாருக்கு அவருடைய குடும்பத்தினர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடத்தி வைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள். இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னிடம் வைத்திருந்த பணத்தையும் சிறையில் இழந்ததோடு ராம்குமார், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக இருந்ததால் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்று கூறியுள்ளனர். மேலும் ராம்குமார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.