மத்தியப் பிரதேசம் விடிஷா பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் நடந்த ரீ-நீட் (re-NEET) தேர்வில், குல்ஹான் கிராமத்தைச் சேர்ந்த ராகினி என்ற மாணவி சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. தினக்கூலி வேலை செய்து வரும் அவரது தந்தை உமேஷ் விஸ்வகர்மா, பல ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, லேப்டாப் மற்றும் ஸ்கூட்டர் வாங்கித் தந்து தனது மகளைத் தினமும் 10 மணி நேரம் படிக்க வைத்துள்ளார்.

எப்படியாவது கார்டியாலஜிஸ்ட் (இதய நோய் நிபுணர்) ஆக வேண்டும் என்ற ஒற்றைக் கனவோடு வந்த மாணவி, மழையினாலும் ஸ்கூட்டர் டயர் பஞ்சர் ஆனதாலும் தேர்வு மையத்திற்கு 1:30 மணிக்குப் பதிலாக சில நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார். கேட் மூடப்பட்டதால் ராகினியும் அவரது தந்தையும் அதிகாரிகளிடம் கெஞ்சியுள்ளனர்; ஒருகட்டத்தில் அதிர்ச்சியிலும் வேதனையிலும் தந்தை உமேஷ் தேர்வு மைய வாசலிலேயே மயங்கி விழுந்து கதறி அழுதார்.

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. பின்னர் அதிகாரிகள் ராகினியை உள்ளே அழைத்துச் சென்றபோதிலும், 1:40 மணியுடன் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கான ஆன்லைன் போர்ட்டல் மூடப்பட்டதால் அவரால் தேர்வு எழுத முடியாமல் போனது. இதய நோயால் யாரும் தங்களது அன்பானவர்களை இழக்கக் கூடாது என்பதற்காகவே தான் மருத்துவராக ஆசைப்பட்டதாகக் கூறி மாணவி ராகினி கண்ணீர் மல்கத் தெரிவித்தது பார்ப்போரை உருக வைத்துள்ளது.