தெலுங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, லலிதா தன் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த விவகாரம் எல்.எம்.டி (LMD) காவல் நிலையத்திற்கு எட்டிய நிலையில், போலீசார் இருவருக்கும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்திரமடைந்த லலிதா, திடீரென தனது கழுத்தில் இருந்த தாலியையும், காலில் இருந்த மெட்டியையும் கழற்றி மேஜை மீது வைத்துவிட்டு, “எனக்கு கணவனும் வேண்டாம், பிள்ளைகளும் வேண்டாம்” எனக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.

​இதனைத் தொடர்ந்து, தந்தை ரவிக்குமாரும் தனது குழந்தைகளை அங்கேயே தவிக்கவிட்டுவிட்டு வெளியேறிவிட்டார். பெற்றோரால் கைவிடப்பட்டு செய்வதறியாது திகைத்த அந்த இரு பெண் குழந்தைகளும் காவல் நிலையத்திலேயே பல மணி நேரம் அழுது அலைந்தனர். இதைப் பார்த்து மனம் உடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அன்வர், குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, பின்னர் அவர்களை அவர்களின் பாட்டியிடம் பத்திரமாக ஒப்படைத்தார். பெற்ற பிள்ளைகளை இப்படி அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோரின் செயல் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.