ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில், ஜிது முண்டா என்ற பழங்குடியின மனிதர் தனது இறந்த சகோதரியின் வங்கிச் சேமிப்பை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், வங்கி அதிகாரிகள் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் இல்லாமல் பணம் தர மறுத்துள்ளனர். தான் படிப்பறிவற்றவன் என்றும், தன் சகோதரி இறந்துவிட்டார் என்றும் அவர் எவ்வளவோ கூறியும் அதிகாரிகள் கேட்கவில்லை. ஒருகட்டத்தில் விரக்தியடைந்த ஜிது முண்டா, புதைக்கப்பட்ட தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது எலும்புக்கூட்டை ஒரு மூட்டையில் கட்டி வங்கிக்குத் தூக்கி வந்துள்ளார்.

​இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதிகாரிகள் அவருக்குத் தேவையான ஆவணங்களை உடனடியாகத் தயார் செய்து, அவர் கேட்ட 19,402 ரூபாயை வழங்கினர். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பாக 30,000 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது. பணத்தைக் கொடுக்கும்போது வங்கி அதிகாரிகள் ஜிது முண்டாவுடன் ‘போட்டோஷூட்’ நடத்தியது, அதிகாரிகளின் விளம்பர மோகத்தையும் மனிதாபிமானமற்ற செயலையும் காட்டுவதாக இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.