தருமபுரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த சவுக்கடி கொடுக்க வேண்டும் என ஆவேசமாகப் பேசியுள்ளார். தருமபுரி மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி முதல்வர் ஸ்டாலினிடம் பலமுறை நேரில் முறையிட்டும், அவர் அதைத் திட்டமிட்டே புறக்கணித்து விட்டதாக அன்புமணி மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வரானவுடன், தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம்தான் அவரது முதல் அறிவிப்பாகவும், முதல் கையெழுத்தாகவும் இருக்கும் என அதிரடி வாக்குறுதி அளித்தார். தருமபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மாற்றும் இந்தத் திட்டத்தைப் புறக்கணித்த திமுகவுக்குத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அவர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
