ராஜஸ்தான் மாநிலம் தோல்புர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ராஜேந்திர சிசோடியா என்ற 50 வயது நபர் உத்திரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த குற்றவாளியைப் பிடிக்க காவல்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவித்திருந்தனர். காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க தலையை மொட்டையடித்து, முகத்தில் பர்தா அணிந்து, உதட்டில் சாயம் பூசி பெண் வேடத்தில் பிருந்தாவனத்தில் ஒளிந்திருந்த அவரைத் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திப் பிடித்தனர்.

 

ஏற்கனவே போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இந்த நபரைத் தோல்புர் வீதிகளில் காவல்துறையினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.