உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள புகழ்பெற்ற கங்கா நதிக் கரையான கார்முக்தேஷ்வர் பகுதியில், புனித கங்கையில் இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளைக் கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரிய புனித நதியான கங்கையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த இளைஞன் தனது பைக்கை தண்ணீருக்குள் இறக்கி அலட்சியமாகச் சுத்தம் செய்துள்ளான்.

மத நம்பிக்கைக்குப் புறம்பான இந்தச் செயலைக் கண்ட அங்கிருந்த பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த இளைஞரின் அநாகரிகமான செயலைத் தங்கள் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.

புனிதமான நதியை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல், மக்களின் மத உணர்வுகளை இந்த இளைஞன் அவமதித்துள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கங்கையைச் சுத்தமாக வைத்திருக்க அரசு பல கோடி ரூபாய் செலவழித்து வரும் நிலையில், இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளன.

“>

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புனித இடங்களில் இத்தகைய செயல்கள் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வுடன் கூடிய விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.