மத்திய பிரதேசம், ஷாஜாபூர் மாவட்டம் மஹுபுரா பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஒரு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வரும் சோனு பாவ்சரின் 6 வயது மகள் சி.வி. பாவ்சர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, இரண்டு தெரு நாய்கள் திடீரென அந்த சிறுமியை நோக்கி பாய்ந்தன.

திடீரென தாக்குவதற்காக பாய்ந்த அந்த நாய்கள், சிறுமியை கடிக்க முயன்ற வேளையில் அருகில் இருந்த சமூக சேவகர் கைலாஷ் சென், ஒருசில விநாடிகளில் அந்த இடத்துக்குச் சென்று சிறுமியை பாதுகாப்பாக மீட்டார்.

இந்த சம்பவம் முழுவதும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதில் சிறுமி நாய்களால் சூழப்பட்டதும், கைலாஷ் சென் நேரத்தில் விரைந்து சென்று ஒரு பொருளை கொண்டு நாய்களை விரட்டும் காட்சியும் தெளிவாக பதிவாகியுள்ளது. இக்காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது. குழந்தையின் உயிரை காப்பாற்றியதைப் பார்த்த பலர் கைலாஷ் செனுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

தெரு நாய்கள் தாக்கும் சம்பவங்கள் இந்த பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறுவதால், பொதுமக்கள் பெரும் கவலையில் உள்ளனர். சில நாட்களுக்கு முன் இதே பகுதியில் 10 வயது சிறுமியை நாய்கள் தாக்கியதாக புகார் தெரிவித்துள்ளனர். மக்கள், நகராட்சி நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து தெரு நாய்களின் அச்சுறுத்தலால் சிறுவர்கள் பாதுகாப்பாக வெளியில் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, ஷாஜாபூர் நகராட்சியினர், அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு தெருநாய்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்துள்ளது.