இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள், இலங்கையின் தலைநகரான கொழும்பில் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளன.

‘ட்ரக் 1.5’ என்ற பெயரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்திய ஆளும் கட்சியான பாஜகவின் மூத்த பிரதிநிதி ஒருவரும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் நவாஸ் ஷெரீப்பின் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்துவரும் சூழலில், இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த ரகசியக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், எதிர்காலத்தில் போர் போன்ற அவசரக்கால சூழல்கள் ஏற்படும்போது, இரு அணுஆயுத நாடுகள் நேரடியாக மோதிக்கொள்வதைத் தவிர்ப்பதற்கான ‘நெருக்கடி கால தகவல் தொடர்பு’ முறையை வலுப்படுத்துவதாகும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் சிந்து நதி நீர் பங்கீடு போன்ற சிக்கலான விவகாரங்கள் குறித்தும் இதில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்திய அரசு தரப்பில் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கப்படவில்லை.

“>

 

‘பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது’ என்பதில் உறுதியாக இருக்கும் இந்திய அரசு, பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியாகத் தனிமைப்படுத்தும் தனது கொள்கையில் மாற்றமில்லை என்பதை உணர்த்தியுள்ளது. எனினும், எல்லைப் பகுதியில் அமைதியைப் பேணவும், போர் அபாயத்தைத் தவிர்க்கவும் இத்தகைய மறைமுகத் தூதரக நடவடிக்கைகள் அவசியமானதாகக் கருதப்படுகிறது.