தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி பகுதியில் மாரீஸ்வரன் (43) என்பவர் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரீஸ்வரனின் மனைவி பவுன் இசக்கி தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த மாரீஸ்வரன் திடீரென பவுன் இசக்கியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்களுக்கிடையே தகராறு முற்றிய நிலையில் மாரீஸ்வரன் அவரது மனைவியை அரிவாளால் தாக்க முற்பட்டார். அதில் அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அருகிலிருந்த உறவினர்கள் உடனடியாக ஓடி வந்து மாரீஸ்வரனை பிடித்தனர்.

அதன் பின் அவர் பவுன் இசக்கியை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். தற்போது பவுன் இசக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாரீஸ்வரனை கைது செய்துள்ளனர் மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.