வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3 வருடத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. 2017 ஆம் வருடம் டிசம்பர் 31ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்பாக பதிவு செய்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இறுதி வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் 200, பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300, மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400, பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாத ரூபாய் 600 வழங்கப்படுகின்றது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 600, மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூபாய் 750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 1000 உதவி தொகையாக 10 வருடங்களுக்கு வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் 5 வருடத்திற்கு மேல் வேலை இல்லாமல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். மேலும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் மற்றவர்கள் 40 வயதுக்கு மிகமாமலும் இருக்க வேண்டும். அவரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவி தொகை பெறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இதற்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் அடுத்த மாதம் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் அலுவலக வேலை நாளில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து வருடங்களுக்கும் மற்றவர்களுக்கு மூன்று வருடங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகின்றது.