கடலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தில் விவசாயியான வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் அன்னதானம் பேட்டை கிழக்கு வெளி பகுதியில் தனது நிலத்திற்கு அருகே இருக்கும் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் அன்னதானம் பேட்டையைச் சேர்ந்த மனோகரன், அவரது மனைவி ஜெயலட்சுமி, மகன் சத்ய நாராயணன் ஆகியோர் அந்த நிலத்தில் பங்கு கேட்டு தகராறு செய்தனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று சங்கீதா நெற்பயிரை பார்வையிட சென்றார். அப்போது மனோகரன் தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து சங்கீதாவை அரிவாள் மற்றும் மண்வெட்டியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் படுகாயமடைந்து சங்கீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மனோகரன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளார். மேலும் மனோகரன், சத்யநாராயணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.