திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி மடத்தப்பட்டு பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காட்டில் வசிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் வேலை விஷயமாக அக்காள் வீட்டில் தங்கி இருந்த சிவக்குமார் தினமும் படகு கட்டும் கூடத்தில் பணிக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது உறவினரான 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணுடன் சிவகுமார் நட்பாக பழகியுள்ளார். அந்தப் பெண் நாகர்கோவில் பகுதியில் இருக்கும் தனியார் நர்சிங் ஹோமில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய அக்காளின் பிறந்தநாள் விழா மண்டைக்காட்டில் இருக்கும் வீட்டில் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் நீ கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என சிவகுமார் மாணவியை வற்புறுத்தி உள்ளார்.

இதனை நம்பி மாணவி பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு வீட்டில் யாரும் இல்லை. இதனையடுத்து சிவகுமார் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி அதிர்ச்சியடைந்தார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி சிவகுமார் மாணவியை சமாதானப்படுத்தி உள்ளார்.

இதனையடுத்து சிவகுமாரின் தந்தை பால்ராஜ் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மேலும் திருமணத்திற்கு சிவகுமாரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட மாணவி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சிவக்குமார், அவரது தந்தை ஆகியோர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.