தமிழ்நாடு வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம் நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை சென்னை வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை உத்தரவின்படி தொழில்நுட்ப ஆலோசகர் சிவகுமார் ஆய்வு செய்வதற்காக நாகைக்கு வந்துள்ளார்.  இந்நிலையில் நாகை வட்டாரம் பொரவாச்சேரி, குற்றம்பொருந்தானிருப்பு போன்ற கிராமங்களில் விதை கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதை உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள் பற்றி விதைசான்று மற்றும் அங்கக சான்று துறையின் விதை வல்லுனரால் பயிற்சி அளிக்க வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து விதை கிராம திட்ட கூறுகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம் செயல்படுத்துதல் பற்றி தொழில்நுட்ப ஆலோசகர் அறிவுரை வழங்கியுள்ளார்.