திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சசிகுமார் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சசிகுமார் அவரது நண்பர் குகன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சமயபுரம் நரசிங்கமங்கலத்தில் நடைபெறும் கபடி போட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் மாந்துறை பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதால் சசிகுமார் படுகாயம் அடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சசிகுமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணை அடிப்படையில் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.