திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் லாவண்யா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நாகராஜின் இரண்டாவது மகளுக்கு கண் பார்வை குறைபாடு இருக்கிறது. இதனால் அவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இருக்கும் பார்வையற்றோர் பள்ளியில் படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று நாகராஜின் இரண்டாவது மகள் வீட்டில் இருந்து அப்பகுதியில் இருக்கும் சாலைக்கு வந்தார்.

இதனை பார்த்து பதறிய நாகராஜின் மனைவி தங்கையை கவனித்துக் கொள்ளாமல் எங்கே சென்றாய் என கேட்டு லாவண்யாவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த லாவண்யா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.