திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வாய்ச் சொல் வீரர் மந்திரி திரு. மா சுப்பிரமணியத்திற்கு கடும் கண்டனம் என அதிமுக கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்..

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வாய்ச்சொல் வீரர் மந்திரி திரு. மா சுப்பிரமணியத்திற்கு கடும் கண்டனம். பேய்க்கு வாக்கப்பட்டால் முருங்கை மரத்தில் தான் குடியிருக்க வேண்டும் என்பதற்கேற்ப இந்த விடியா திமுக ஆட்சியாளர்களுக்கு வாக்களித்த பாவத்திற்காக அப்பாவி தமிழக மக்கள் புதை குழிக்குள் செல்லும் கொடுமை அரங்கேறி வருகிறது. தங்களின் இன்னுயிரைக் காப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய மக்கள் அலட்சியமாக நடத்தப்படுவதும், முறையாக சிகிச்சை அளிக்கப்படாததும், போதிய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருந்துகள் இல்லாததாலும் தமிழக மருத்துவத்துறையின் பெருமை இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்குலைந்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டு கால ஆட்சியில் தலைநிமிர்ந்து நின்ற தமிழக மருத்துவ துறை கடந்த 2 ஆண்டுகளாக பொம்மை முதலமைச்சரின் பரிபாலனத்தில் தலை குனிந்து நிற்கிறது. சமூக வலைதளங்கள் எல்லாம் முதலமைச்சரை தான் பொம்மை என்று வர்ணிக்கும் வேளையில் அவரைப் போலவே சுகாதாரத்துறை மந்திரி திரு. மா சுப்பிரமணியமும் போட்டி போட்டு நடிப்பது கேவலமாகும்.

ஒன்றரை வயது குழந்தை கை இழந்த அவலம் :

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திரு. தஸ்தகீர் – திருமதி அஜிஸா தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை முகமது மகிருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடல்நலம் தேறி வந்த நிலையில், 29.06.2023 அன்று குழந்தையின் வலது கையில் ட்ரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தனது குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாகவும், இது குறித்து செவிலியர்களிடம் பலமுறை புகார் கூறியும் அவர்கள் அலட்சியப்படுத்தியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை குழந்தை முகம்மது மகிரின் தாயார் திருமதி அஜிஸா  கூறும் போது, அவங்க தப்பா போட்ட ஒரு ஊசியால் என் குழந்தை கையை எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியத்தால் தான் என் குழந்தையின் கை அழுகியது. குழந்தையின் விரல் கருப்பாக மாறும் போதே செவிலியர்களிடம் பலமுறை சொன்னேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. பலமுறை செவிலியர்களின் அலட்சியத்தால் தான் என்னுடைய குழந்தையின் கை போனது. என்னுடைய குழந்தைக்கு நடந்தது போல் எந்த குழந்தைக்கு நடக்கக்கூடாது என்று கண்ணீர் மல்க அழுதபடி புலம்பினார்..

மறுநாள் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் வலது கை அழுகிவிட்டதால் தோள்பட்டை வரை கையை அகற்ற வேண்டும் என்று தீர்மானித்து தொடர் சிகிச்சைக்காக அக்குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தையின் கை அகற்றப்பட்டதாக தெரிய வருகிறது.

இந்த விடியா திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளின் தரம் குறைந்துள்ளதும், ஆட்சியாளர்களைப் போலவே மருத்துவ பணியாளர்களும் அலட்சியமாக செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடுவதும் புதிது அல்ல. பிறந்ததிலிருந்தே முகமது மகிர் பல்வேறு இடர்பாடுகளில் (complication) இருந்ததாக சுகாதாரத்துறை மந்திரி திரு. மா சுப்பிரமணியம் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். அந்தக் குழந்தை பிறந்தது முதல் இவர்தான் அதற்கு வைத்தியம் பார்த்தது போல் கருத்து தெரிவித்திருப்பது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. இந்தக் குழந்தை சம்பவம் விடியா  ஆட்சியில் முதல் முறை அல்ல.

 கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சை :

சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி திரு ரவி என்பவரின் 17 வயது மகளும், கால்பந்து வீராங்கனையுமான கல்லூரி மாணவி பிரியா கால் தசை பிடிப்புக்காக பெரியார் நகர் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைக்காக சென்ற போது அரசு மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தாலும், கவன குறைவாலும் அவரது வலது காலை இழந்ததோடு அவரது உயிரையும் பறி கொடுத்தது இன்னும் தமிழக மக்களின் மனதில் இருந்து அகலவில்லை.

காவலர் மகளுக்கு தவறான சிகிச்சை :

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த திரு. கோதண்டபாணி அவர்களின் 7 வயது பெண் குழந்தைக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் வலது கால் ஊனம் ஏற்பட்டதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தலைமைச் செயலகத்தில் தனது மகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவலமும் நடந்தேறியது.

சளி தொல்லைக்கு நாய்க்கடி ஊசி :

கடந்த ஜூன் மாதம் கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி திரு. கருணாகரன் சளி தொல்லையால் அவதி உற்ற தனது மகள் சாதனாவை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தால் சளிக்கு ஊசி போடுவதற்கு பதிலாக இரண்டு நாய்க்கடி ஊசியை போட்டு மயக்கமுற்ற நிலையில், தற்போது சாதனா மேல் சிகிச்சை பெற்று வரும் அவலமும் நடந்தேறியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மந்திரியின் செயல்பாடுகளால் புதிதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட தமிழகத்திற்கு வரவில்லை. பழமை வாய்ந்த சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளின் உட் கட்டமைப்பை சீரமைக்காத இந்த விடியா திமுக அரசின் அலட்சியத்தால் இந்த ஆண்டு 500 எம்பிபிஎஸ் இடங்களை இழக்கும் கேவலம் ஏற்பட்டது.

அம்மாவின் ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடின்றி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டன, உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன, மருத்துவ உபகரணங்கள் எம் ஆர் ஐ ஸ்கேன் போன்ற அனைத்து உபகரணங்களும் பல கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் வாய்வீரம் பேசும் இந்த மந்திரி என்ன காரணத்தினாலோ இதுவரை முறையாக மருந்துகளை தமிழ்நாடு மருத்துவ கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யாமல் உள்ளூர் கொள்முதல் மட்டுமே செய்வதாக செய்திகள் வருகின்றன.

இவ்வளவு பிரச்சனைகள் மருத்துவத்துறையில் கொழுந்து விட்டு எரியும் போது சுட்டிக்காட்டும் தவறுகளை குறைகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மந்திரி மா. சுப்பிரமணியத்திற்கு கிஞ்சித்தும் இல்லை. அதற்கு பதில் இவர் சம்பந்தமில்லாமல் பூசி மொழுகுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். துறை மீது கவனம் செலுத்தாத ஒரு நபர் சுகாதாரத்துறைக்கு மந்திரியாக இருப்பது தமிழக மக்களின் தலையெழுத்து.

விடியா திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகிருக்கு இனியாவது முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், எதிர் காலத்தை இழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தவறிழைத்த மருத்துவ பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அரசு மருத்துவமனையிலேயே நம்பி இருக்கும் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவதை இந்த விடியா திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடுமையாக சாடியுள்ளார்..

https://twitter.com/AIADMKOfficial/status/1675849642385498112