ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, அந்தப் பாதையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்து ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதிப்பதோடு, சாமானிய மக்களின் வாழ்க்கையையும் நிலைகுலையச் செய்யும் என்று இந்தக் கூட்டறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இத்தகைய குறுக்கீடுகளைக் கைவிட்டு, ஐநா பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களுக்குக் கட்டுப்படுமாறும் அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த நெருக்கடிக்கு மத்தியில், கப்பல் போக்குவரத்திற்கு இடையூறாகக் கருதப்படும் ஈரானின் கடலோர மற்றும் நிலத்தடி ராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா சனிக்கிழமை அதிரடித் தாக்குதல்களை நடத்தியது.

ஏவுகணைத் தளங்கள் மற்றும் கடல்வழித் தடுப்பு உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையானது, உலகளாவிய வர்த்தகப் பாதையைப் பாதுகாப்பதற்கான முயற்சி என்று அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்தே அமெரிக்கா இந்தத் தீவிரமான பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்த விரும்புவதாகக் கூறினாலும், அவரது பேச்சை நம்பத் தயாராக இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. டிரம்பிற்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று எச்சரித்துள்ள ஈரானிய அதிகாரிகள், ஒரு தரப்பு மற்றொன்றை அழித்துக் கொண்டிருக்கும்போது போர் நிறுத்தம் என்பது சாத்தியமற்றது என்றும் கூறியுள்ளனர்.

சுமார் 4,000 மைல்கள் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச எரிசக்தி சந்தையை நிலைப்படுத்த அவசரகால எண்ணெய் இருப்புகளை வெளியிடவும் திட்டமிடப்பட்டு வருகிறது.