சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்கராஜ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு லதா (50) என்ற மனைவியும், நவீன் (32), ராஜேஷ் என்ற மகன்களும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் நவீனுக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இதனால் தங்கராஜுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகறாறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 13-ஆம் தேதி வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், தங்கராஜ் தன் மீதும் தன் மனைவி மீதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட நவீன் அவர்களை மீட்பதற்காக சென்ற நிலையில் அவர் மீதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக செல்வி தன்னுடைய குழந்தையை தூக்கிவிட்டு பின் வாசல் வழியாக வெளியே வந்ததால் அவர் காயம் இன்றி தப்பினர். பலத்த தீ காயம் ஏற்பட்டதில் தங்கராஜ் மற்றும் லதா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நவீனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக காரைக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.