பிரேசில் நாட்டில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் நாட்டு மக்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ளும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு துப்பாக்கிக்கும் வெடி மருந்துகள் 200-ல் இருந்து 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஒருவர் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள நினைத்தால் அவர்கள் அதற்கான அவசியத்தை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இது குறித்து அந்நாட்டு அதிபரான லுலாடா சில்வா கூறுகையில் “மக்கள் அவர்களது பாதுகாப்பிற்கு வீட்டில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக வைத்துக் கொள்ளட்டும் ஆனால் கைகளில் அதிக துப்பாக்கி வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது.

பிரேசிலை ஆயுதமற்ற நாடாக மாற்ற தொடர்ந்து போராடுவோம் என கூறியுள்ளார்.  புதிய விதிகளின்படி துப்பாக்கிகள் மீதான கண்காணிப்பு காவல்துறையினர் பொறுப்பில் விடப்படுகிறது. இதற்கு முன்னதாக ராணுவத்தினர் வசம் இந்த பொறுப்பு இருந்தது. பிரேசில் மக்கள் தங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை சட்டபூர்வமாக காவல்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.