தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை வருகிறது. மறுநாள் ஜனவரி 15ஆம் தேதி தைப்பொங்கல், பதினாறாம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி உழவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஒவ்வொரு வருடமும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்கு செல்ல இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதன்படி ஜனவரி 12ஆம் தேதி பயணத்திற்கு இன்றும், ஜனவரி 13ஆம் தேதி பயணத்திற்கு நாளையும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.