சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் ஐ.டி நிறுவன பஸ் ஒன்று நேற்று காலை 11 மணியளவில் பணியாளர்களை இறக்கிவிட்டு டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவொற்றியூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும் போது பஸ்ஸின் பக்கவாட்டு பகுதியில் உள்ள டூல்ஸ் பாக்ஸ் வைத்திருக்கும் பெட்டியின் கதவு திறந்து வெளியே நீட்டியபடி இருந்துள்ளது. பஸ் டிரைவர் யுகேந்திரன் இதனை கவனிக்கவில்லை.

இந்நிலையில் பஸ் நிறுத்தத்தில் சென்று கொண்டிருந்த யாஸ்மின்(34) மற்றும் வெங்கடேசன் (27) ஆகிய இரண்டு பேர் மீது திறந்து கிடந்த அந்த டூல்ஸ் பெட்டியின் கதவு இடித்துள்ளது. இதில் வெங்கடேசன் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் யாஸ்மின் தரையில் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த யாஸ்மீனை அருகில் இருந்தவர்கள் மீது உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.