தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனகல் கட்டியம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட பொருளாளர் பழனி ஐயா மாவட்ட துணை தலைவர் ஞான மாணிக்கம், தஞ்சை ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், திருவையாறு ஒன்றிய செயலாளர் ராம், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கருப்பன், நிர்வாகிகள் ராஜா வடிவேலன் போன்றோர்  முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

அந்த வகையில் ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம் திருமண்டக்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு பயிரிட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.112 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் 6 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக பெற்ற வங்கி கடன் பிரச்சனையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். தமிழக அரசின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.