சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சிப்பத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள ரூபாய் எவ்வளவு என்பதை தகவல் பலகை எழுதி வைப்போம் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அறிவித்ததை செயல்படுத்த வேண்டும்.

சிப்பத்துக்கு  அரசு நிர்ணயித்துள்ள விலை தருவது தொடர்பான குறைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் தகவல் பலகையும் எழுதி வைக்க வேண்டும். அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மாங்குளம், வேளாணி உள்ளிட்ட பகுதிகளிலும் காளையார் கோவில், தேவகோட்டை, இளையான்குடி பகுதிகளிலும் நெற்பயிர் கருகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்ற விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 15-ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.