நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சரிதா, சிறுமி நான்சி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டு, அவர்களது குடும்பத்தினர்மற்றும் உறவினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டம் ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியை  சேர்ந்த திருமதி. சரிதா (வயது 29) க/பெ. பிரசாந்த் என்பவர் கடந்த 29.12.2023 ஆம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் (அஞ்சல்) எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி (வயது 31/2) த.பெ. சிவ்சங்கர் என்பவர் கடந்த 06.01.2024 அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

விலைமதிப்பில்லாத இந்த இரு  உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 லட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.