தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு அரசியல் கட்சியினரும் கண்காணித்து வருகிறார்கள். இங்கு மொத்தம் 209 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை பலத்த மழையுடன் திடீரென இடி சத்தம் கேட்டது.

இதனால் சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி மாவட்ட ஆட்சியர் உடனடியாக சிசிடிவி கேமராக்களை சரி செய்ய உத்தரவிட்டார். சுமார் 76 கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்த நிலையில் 30 நிமிடத்தில் அவை அனைத்தும் சரி செய்யப்பட்டது. மேலும் இதற்கு முன்னதாக சில மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்த நிலையில் தற்போது தென்காசியிலும் செயலிழந்தது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.