தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் பகுதிகளில் இருக்கும் தனியார் பள்ளியின் பின்புறம் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் என்பது தெரியவந்தது.

கட்டிட மேஸ்திரியான ஜெயவேல் இறப்பு குறித்து அவரது தந்தை கோவிந்தசாமி, ஜெயவேலின் அக்காள் கணவர் திருப்பதி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஜெயவேல் மது குடித்துவிட்டு வயதான தனது தாய், தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். சம்பவம் நடைபெற்ற அன்று பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி ஜெயவேல் மிரட்டியுள்ளார்.

உடனே கோவிந்தசாமி அருகே இருந்த கடப்பாரையால் ஜெயவேலை தாக்கியதால் அவர் இறந்துவிட்டார். மேலும் தனது மருமகனான சக்திவேலுக்கு கோவிந்தசாமி தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு இருவரும் சேர்ந்து ஜெயவேலின் உடலை எரிக்க முடிவு செய்தனர். அதற்குள் சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.