தோனி நிச்சயம் அடுத்த ஐபிஎல்லில் விளையாடுவார் என சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி தெரிவித்துள்ளார்..  

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தோனி இன்னும் ஐபிஎல்லில் விளையாடி வருகிறார். 4 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் தோனி. இந்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் விளையாடி வருகிறது. இதுவரை சென்னை அணியின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது. சென்னை அணி 5 ஆட்டங்களில் 3 வெற்றியும், 2 தோல்வியும் பெற்று, புள்ளிபட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

தோனி ஐபிஎல்லில் விளையாட வந்தாலே அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பார்கள். சென்னையின் சேப்பாக்கமாக இருந்தாலும் சரி,இந்தியாவின் எந்த மைதானமாக இருந்தாலும்  தோனியின் பெயர் தான் களத்தில் ஒலிக்கும். தோனியை சந்திக்க ரசிகர்கள் மட்டுமின்றி எதிரணி வீரர்களும் ஆர்வமாக இருப்பார்கள்.

ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் எதிரணியின் வீரர்களுக்கு கூட தோனி ஆலோசனை வழங்குவார். தற்போது தோனி ஐபிஎல் இல் மட்டுமே ஆடி வருகிறார். எனவே அவருக்கு இதுதான் கடைசி ஐபிஎல் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. எனவே இந்த ஐபிஎல் போட்டியில் தோனி ஆடும் அனைத்து போட்டியையும் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்..

இதனிடையே தல தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.. மொயின் அலி கூறியதாவது, தோனிக்கு நிறைய ரசிகர்கள் இருந்தாலும் தலைக்கனம் என்பது அவருக்கு சிறிது கூட இல்லை. மிகவும் தாழ்மையானவர். எதைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் அவரிடம் பேசலாம். டிவியில் நீங்கள் பார்ப்பதை போலவே நிஜத்திலும் அவரது குணம் இருக்கும். அவர் நிச்சயம் அடுத்த ஐபிஎல்லில் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.