கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லைன் கொல்லை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது தனக்கும் மாதவன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக அவர் கூறியுள்ளார். இதில் மாதவன் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ள நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருந்துள்ளது. இதனால் லட்சுமி அவரை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அவர் லட்சுமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற போது மாதவன் அங்கு வந்துள்ளார். அவர் ஆத்திரத்தில் லட்சுமியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் மாதவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.