இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மதியம் 12 மணிக்கு மேல் மக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் 15 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்தி வருவதால் நாளை முதல் அவசிய காரணங்களை தவிர நண்பகல் 12 மணி முதல் மதியம் மூன்று மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வெளியே செல்லும்போது குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும். வியர்வை வெளியேறும் வகையில் தளர்ந்த காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என கூறியுள்ளார்.