ரயில்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், ஓடும் ரயிலில் பயணி ஒருவரின் செல்போனை பெண் ஒருவர் யாருக்கும் தெரியாத வண்ணம் மிக சாதுரியமாகத் திருடும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. ரயிலில் கடுமையான கூட்ட நெரிசல் நிலவிய சூழலில், அந்தப் பெண் கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகொண்டு பயணம் செய்துள்ளார். அப்போது தனக்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு பயணியின் கவனக் குறைவைச் சாதகமாகப் பயன்படுத்திய அந்தப் பெண், அவரது பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போனை யாருக்கும் சந்தேகம் வராதபடி நைஸாகத் திருடித் தனது கைக்குள் மறைத்துக் கொண்டுள்ளார்.

​அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் ரயிலில் இருந்த மற்றொரு பயணி இந்த ஒட்டுமொத்த திருட்டுச் சம்பவத்தையும் தனது மொபைல் கேமராவில் துல்லியமாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், விவாதப் புயலையும் கிளப்பியுள்ளது. “ரயில்களில் பயணம் செய்யும்போது நம்முடைய உடைமைகளை, குறிப்பாக செல்போன் மற்றும் பணப்பைகளை எவ்வளவு கவனமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோவே ஒரு சாட்சி” எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து, இந்தத் திருட்டுப் பெண்ணை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என ரயில்வே போலீசாருக்கு டேக் செய்து கமெண்ட்டுகளில் கொந்தளித்து வருகின்றனர்.