மத்தியப் பிரதேசம் சஹாகர் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவலர் ஒருவர், ரயில்வே இன்ஸ்பெக்டர் என தன்னை காட்டிக்கொண்டு, காக்கி சீருடையுடன் தேனிலவு சென்ற போது மனைவியால் கொடூரமாக  கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவன்ஷியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மூன்று நட்சத்திரங்கள் கொண்ட சீருடையை அணிந்த அவர், ராஜாவின் தந்தையுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். அடையாள அட்டையும் ஆவணங்களையும் காட்டச் சொல்லியபோது அவர் திணறியதால், தகவல் பெற்ற ராஜேந்திர நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரைக் கைது செய்தனர்.

காவல்துறை விசாரணையில், அந்த நபர் உண்மையில் ரயில்வே இன்ஸ்பெக்டர் அல்ல, பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல் கான்ஸ்டபிள் பஜ்ரங் லால் ஜாட் என தெரியவந்தது. அவர், ராஜாவை 2021 ஆம் ஆண்டு மகாகால் கோவிலில் சந்தித்ததாகக் கூறினார். ஆனால், அந்த காலம் கோவிட் ஊரடங்கு இருந்தது, ராஜா பயணம் செய்யவில்லை என குடும்பம் கூறியுள்ளது. இதனால் மேலும்   சந்தேகத்திற்குள்ளானது. அடையாள அட்டையை காட்ட கேட்ட போது, பேச்சை மாற்ற முயன்றதும் சந்தேகம் மேலும் அதிகரித்தது.

“>

 

விபின் ரகுவன்ஷி அளித்த புகாரின் அடிப்படையில், போலி இன்ஸ்பெக்டரின் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 204 (அரசு ஊழியரை போலக் காட்டுதல்) மற்றும் 205 (மோசடி நோக்கத்துடன் அரசு ஊழியர் சீருடையை அணிதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் ராஜாவின் மரணம் குறித்து படித்த பிறகு, குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவிக்கவே சீருடையில் வீட்டிற்கு வந்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் உண்மையில் வந்த நோக்கம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.