தமிழில் எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களிலும் தெலுங்கில் அதிக திரைப்படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்துக்கு சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயம் சில காரணங்களால் நின்றுபோனதாக தெலுங்கு இணையத்தளங்களில் கடந்த சில தினங்களாக பரபரப்பு தகவல் பரவியது.

இதை சர்வானந்த் குடும்ப நண்பர் ஒருவர் மறுத்திருந்தார். அதாவது, சர்வானந்த் 40 நாட்கள் லண்டனில் படப்பிடிப்புக்காக சென்று விட்டு ஐதராபாத் திரும்பி உள்ளார் எனவும் திருமண வேலைகள் விரைவில் துவங்கும் எனவும் அவர் கூறினார். எனினும் நிச்சயதார்த்தம் நின்று போனதாக தொடர்ந்து தகவல் பரவிவந்தது. இந்நிலையில் திருமண தேதியை சர்வானந்த் அறிவித்திருக்கிறார். ஜெய்ப்பூரிலுள்ள லீலா பேலசில் அடுத்த மாதம் (ஜூன்) 3ம் தேதி சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நிச்சயம் நின்றுபோனதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.