மத்தியப் பிரதேச மாநிலம் பாண்டுர்ணா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில், வத்சலா பாய் துர்வே என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சத்துணவாக லட்டு பாக்கெட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கர்காட் காம்தி கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக அந்த உணவை உட்கொள்ளவில்லை.
அவரது குடும்பத்தினர் வீட்டில் வைத்து அந்தப் பாக்கெட்டைத் திறந்தபோது, அதற்குள் ஒரு சிறிய இறந்துபோன குட்டிப் பாம்பு இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பீதியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியதோடு, அங்கன்வாடி மூலம் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த பெரிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள், உள்ளூர் போலீசார் மற்றும் நைப் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த உணவுப் பாக்கெட்டைக் கைப்பற்றி ஆய்வு அறிக்கை தயாரித்தனர்.
மேலும், பொறுப்பு ஆட்சியர் அக்ரிம் குமார் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட உணவு மாதிரி போபாலில் உள்ள மாநில உணவுப் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், ஆய்வக அறிக்கை வந்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கைக்காகக் காத்திருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
