வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்கு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, முத்துப்பேட்டை பக்கிரிவாடி தெருவை சேர்ந்த பீர் முகமது மகன் முகமது ரபிக் என்பவர் குவைத் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி என்னிடமும் மற்ற 18 பேரிடமும் ரூ.6,34,000 வாங்கினார்.

இந்நிலையில் அவர் கூறியது போல எங்களை குவைத் நாட்டிற்கு வேலைக்கு அனுப்பவில்லை. இதனையடுத்து நாங்கள் கொடுத்த பணம் மற்றும் பாஸ்போர்ட்டை அவர் திருப்பி கொடுக்கவில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ரபிக்கை கைது செய்துள்ளனர்.