மதுரை மாவட்டத்திலுள்ள செல்லக்குளத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஜீவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜீவிதாவை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஜீவிதா ஒப்புக்கொண்டார். இந்நிலையில் குழந்தைக்கு அக்கி நோய் வந்து மூன்று நாட்களாக சிரமப்பட்டு அழுது கொண்டே இருந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜீவிதா தனது குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.