சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே புலியடிதம்மம் பகுதியில் அருளானந்த் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது மகள் அருள் நிஷா தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அருளானந்த் தனது மகளை கல்லூரிக்கு அழைத்து சென்றுள்ளார். சருகனி அருகே உள்ள கோபாலபுரம் வளைவில் வந்த போது தேவகோட்டையில் இருந்து காளையார் கோவில் நோக்கி சென்ற காரும் அருளானந்த் வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருளானந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் அருளானந்தின் மகளை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருளானந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காரை ஓட்டி வந்த ரஹ்மத்துல்லாஹ் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.