கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வேனில் சென்று கொண்டிருந்தார். இந்த வேனை வினோத் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 3-வது வளைவில் சென்று கொண்டிருந்த போது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மாரியம்மாள், பிருந்தா, 12 வயது சிறுவன் உட்பட 6 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.