சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் தனது நண்பருடன் காதலியை தேடி சேலத்திற்கு காரில் சென்றுள்ளார். அவர் தனது காதலியின் வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் விசாரித்த போது எனது காதலியை அழைத்துச் செல்ல வந்ததாக அந்த வாலிபர் தெரிவித்தார். இதனை கேட்டதும் கோபமடைந்த அந்த பகுதி மக்கள் வாலிபரையும் அவரது நண்பரையும் பிடித்து தர்ம அடி கொடுத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரண்டு வாலிபர்களும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.